Archives: செப்டம்பர் 2024

“சிறிய” அற்புதங்கள்

எங்கள் திருமண நிகழ்வில், எங்கள் கூச்ச சுபாவமுள்ள நண்பர் டேவ் ஒரு மூலையில் ஒரு நீள்சதுர, திசுக்களால் மூடப்பட்ட ஒரு பொருளைப் பிடித்தபடி நின்றார். அவரது பரிசை வழங்குவதற்கான முறை வந்தபோது, அவர் அதை முன் கொண்டு வந்தார். இவானும் நானும் அதை அவிழ்த்து, கையால் செதுக்கப்பட்ட மரத் துண்டில் “தேவனுடைய சில அற்புதங்கள் மிகவும் சிறியவைகள்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. சின்னச் சின்ன விஷயங்களிலும் தேவன் கிரியை செய்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், நாற்பத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் அந்த மரத்தகடு தொங்கவிடப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்துதல், உணவை பெற்றுக்கொள்ளுதல், மற்றும் வியாதி குணமாகுதல் போன்ற அனைத்திலும் தேவனுடைய கிரியை இருக்கிறது. 

சகரியா தீர்க்கதரிசியின் மூலம், எருசலேமையும் ஆலயத்தையும் மீண்டும் கட்டுவது குறித்த தேவ கட்டளையை யூதேயாவின் ஆளுநரான செருபாபேல் பெறுகிறார். பாபிலோனிய சிறையிலிருந்து திரும்பிய பிறகு, மெதுவான முன்னேற்றத்தின் ஒரு பருவம் தொடங்கியது. இஸ்ரவேலர்கள் ஊக்கம் அடைந்தனர். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” என்று தேவன் ஊக்கப்படுத்தினார் (சகரியா 4:10). அவர் தனது ஆசைகளை நம் மூலமாகவும் சில சமயங்களில் நம்மை மீறியும் நிறைவேற்றுகிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (வச. 6). 

நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் கடவுளின் கிரியையின் வெளிப்படையான சிறியத்தன்மையைக் கண்டு நாம் சோர்வடையும் போது, அவருடைய சில அற்புதங்கள் ‘சிறியதாக" இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம். அவர் தனது பெரிய நோக்கங்களுக்காக கட்டியெழுப்ப சிறிய விஷயங்களை பயன்படுத்துகிறார்.

 

ஆரோக்கியமான இருதயம்

மனித இருதயம் ஒரு அற்புதமான உறுப்பு. இந்த முஷ்டி அளவிலான உறுப்பு 7 முதல் 15 அவுன்ஸ் வரை எடை கொண்டது. தினமும் இது 100,000 முறை துடிக்கிறது மற்றும் 2,000 கேலன் இரத்தத்தை நம் உடலில் உள்ள 60,000 மைல் இரத்த நாளங்கள் வழியாக செலுத்துகிறது! இத்தகைய ஒரு திட்டமிட்டப் பணி மற்றும் அதிக பணிச்சுமையுடன், இதய ஆரோக்கியம் முழு உடலின் நல்வாழ்வுக்கு ஏன் மையமாக உள்ளது என்பது புரிந்துகொள்ள முடிகிறது. நமது இருதயத்தின் நிலையும், ஆரோக்கியத்தின் தரமும் ஒன்றாக இருப்பதால், ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடர மருத்துவ அறிவியல் நம்மை ஊக்குவிக்கிறது.

மருத்துவ விஞ்ஞானம் நமது உடல் இதயங்களைப் பற்றி அதிகாரபூர்வமாகப் பேசுகையில், தேவன் மற்றொரு வகையான “இருதயம்" பற்றி இன்னும் அதிக அதிகாரத்துடன் பேசுகிறார். அவர் நம் வாழ்க்கையின் மனரீதியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமாய் ஆவிக்குரிய மையத்தைக் குறித்து பேசுகிறார். இருதயம் வாழ்க்கையின் மையச் செயலாக்க உறுப்பாக என்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டும்: “எல்லாக் காலலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதிமொழிகள் 4:23). நம் இதயங்களைப் பாதுகாப்பது நம் பேச்சுக்கு உதவும் (வச. 24), கண்களால் பகுத்தறியும்படி நம்மை வற்புறுத்தும் (வச. 25), மேலும் நம் கால்களுக்குச் சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவும் (வச. 27) உதவுகிறது. வயது அல்லது வாழ்க்கையின் நிலை எதுவாக இருந்தாலும், நம் இருதயங்கள் பாதுகாக்கப்படும்போது, நம் உயிர்கள் பாதுகாக்கப்படும், நம் உறவுகள் பாதுகாக்கப்படும், மற்றும் தேவன் கனப்படுத்தப்படுகிறார்.

தேடி மீட்டெடு

சில நண்பர்கள் புயல் வானிலை முன்னறிவிப்பு மாறும் என்ற நம்பிக்கையில் ஆங்கிலக் கால்வாயில் படகு சவாரி செய்தனர். ஆனால் காற்று உயர்ந்தது, அலைகள் கொந்தளித்து, அவர்களின் கப்பலின் பாதுகாப்பை அச்சுறுத்தியது. எனவே அவர்கள் மீட்புக்குழுவின் (ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிடியூஷன்) உதவிக்கு வானொலி செய்தனர். சில பதட்டமான தருணங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் மீட்பவர்களை தூரத்தில் பார்த்தார்கள். அவர்கள் விரைவில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நிம்மதியுடன் உணர்ந்தனர். அதற்குப் பிறகு எனது நண்பர், “மக்கள் கடல் விதிகளை புறக்கணித்தாலும் இல்லாவிட்டாலும், மீட்புக்குழு அவர்களை காப்பாற்ற எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது” என்று பெருமையுடன் சொன்னார். 

அவர் அந்த கதையை விவரிக்கையில், தேவனுடைய தேடுதல் மற்றும் மீட்பு பணியை இயேசு எவ்வாறு வழிநடத்துகிறார் என்று நான் நினைத்தேன். நம்மில் ஒருவராக வாழ, மனிதனாக பூமிக்கு வந்தார். அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம்முடைய பாவமும் கீழ்ப்படியாமையும் தேவனிடமிருந்து நம்மைப் பிரித்தபோது அவர் நமக்கு ஒரு மீட்புத் திட்டத்தை வழங்கினார். கலாத்தியாவில் உள்ள தேவாலயத்திற்கு எழுதும் போது, பவுல் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்... அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி... நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:3-4). கலாத்தியர்களுக்கு இயேசுவின் மரணத்தின் மூலம் கிடைத்த புதிய வாழ்க்கையின் பரிசை பவுல் நினைவுபடுத்தினார். இதனால் அவர்கள் நாளுக்கு நாள் தேவனை கனப்படுத்துவார்கள்.

நம்மைக் காப்பாற்றிய இயேசு, நம்மைத் தொலைந்து போகாமல் காப்பாற்ற மனமுவந்து மரித்தார். அவர் அவ்வாறு செய்ததால், தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கு நித்திய வாழ்வு இருக்கிறது. மேலும் நன்றியுடன் நம் சமூகத்தில் உள்ளவர்களுடன் வாழ்வளிக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

பொறுப்பற்ற தன்மை மற்றும் கவனக்குறைவு

லிண்டிஸ்ஃபார்ன், பரிசுத்த தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்தில் உள்ள ஒரு அலை தீவு ஆகும். இது ஒரு குறுகிய சாலை மூலம் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை, தரைப்பாலத்தை கடல் மூடுகிறது. அதிக அலைகள் ஏற்படும்போது, அதைக் கடக்கும்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்துப் பலகைகள் பார்வையாளர்களை எச்சரிக்கின்றன. ஆயினும்கூட, சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை அலட்சியம் செய்வதால் பெரும்பாலும் நீரில் மூழ்கிய கார்களின் மேல் உட்கார்ந்து அல்லது அவர்கள் மீட்கப்படக்கூடிய உயர்ந்த பாதுகாப்பு குடிசைகளுக்கு நீந்தி தப்புகிறார்கள். சூரிய உதயத்தைக் கணிப்பதபோல, அலைகளின் வரவை கணிக்கமுடியும். எச்சரிக்கைகள் எல்லா இடங்களிலும் உள்ளன. நீங்கள் அவர்களை தவறவிட முடியாது. ஆயினும்கூட, ஒரு எழுத்தாளர் லிண்டிஸ்ஃபார்ன் “பொறுப்பற்றவர்கள் அலையை கடக்க முயற்சிக்கும் இடம்" என்று கூறுகிறார். 

“மூர்க்கங்கொண்டு துணிகரமாய்” இருப்பது மதியீனம் என்று நீதிமொழிகள் நமக்குச் சொல்கிறது (14:16). ஒரு பொறுப்பற்ற நபர் ஞானம் அல்லது புத்திசாலித்தனமான ஆலோசனையை சிறிதும் பொருட்படுத்துவதில்லை; மற்றவர்களிடம் கவனம் அல்லது விடாமுயற்சியுடன் அக்கறை காட்டுவதில்லை (வச. 7-8). எவ்வாறாயினும், ஞானம் நம்மைக் கேட்கவும் சிந்திக்கவும் தாமதப்படுத்துகிறது. இதனால் நாம் உணர்ச்சிவசப்படுவதில்லை அல்லது அரைகுறையான யோசனைகளால் (வச. 6). நல்ல கேள்விகளைக் கேட்கவும், நம் செயல்களின் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளவும் ஞானம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொறுப்பில்லாத பேதைகள் உறவுகளைப் பொருட்படுத்தாமல் சத்தியத்தை புறக்கணித்து நடக்கிறார்கள், “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” (வச. 15). 

நாம் சில சமயங்களில் தீர்க்கமாகவோ அல்லது வேகமாகவோ செயல்பட வேண்டியிருக்கும் போது, நாம் பொறுப்பற்ற தன்மையை எதிர்க்கலாம். நாம் தேவனுடைய ஞானத்தைப் பெற்று பயிற்சி செய்யும்போது, நமக்கு அவசியப்படும் வேளைகளில் அவர் நம்மை வழிநடத்துவார் (வச. 15).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

தி இண்டியாமேன்

1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, 'தி ஹிப்பி டிரெயில்' ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. "பேடி" என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.

எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.